Tue. May 7th, 2024

தமிழகத்தின் தற்போதைய தலைமைச் செயலாளரான கே.சண்முகம் ஐ.ஏ.எஸ், கடந்த 2019 ஆம் ஆண்டு பதவியேற்றுக் கொண்டார். அவரது பதவிக்காலம் கடந்த ஜூலையில் முடிவடைந்த நிலையில், அவருக்கு மூன்று மாதங்கள் நீட்டிக்கப்பட்டது. கொரோனோ காரணமாக மேலும் 3 மாதங்கள் நீட்டிக்கப்பட்டதையடுத்து, வரும் ஜனவரி 30 ஆம் தேதியோடு அவரது பணிக்காலம் நிறைவடைகிறது. ஏற்கெனவே இரண்டு முறை, அதாவது 6 மாதங்கள் பணி நீட்டிக்கப்பட்ட நிலையில், மேலும் மூன்று மாதங்களுக்கு அவருக்கு பணி நீட்டிப்பு வழங்க தமிழக அரசு முடிவெடுத்தது. ஆனால், மூன்றாவது முறையாகவும் பணி நீட்டிப்பு பெற்று தொடர்ந்து தலைமைச் செயலாளர் பதவியில் நீடிப்பதற்கு கே. சண்முகத்திற்கு விருப்பம் இல்லை.

இதனால், தனக்கு பணி நீட்டிப்பு வேண்டாம் என்று அவர் கூறிவிட்டார். இதனைத்தொடர்ந்து, பணி மூப்பு அடிப்படையில், தற்போது கூடுதல் தலைமைச் செயலாளராக, ஊரக வளர்ச்சித் துறையின் செயலாளராக உள்ள ஹன்ஸ்ராஜ் வர்மா ஐ.ஏ.எஸ்.ஸை, புதிய தலைமைச் செயலாளராக நியமனம் செய்ய தமிழக அரசு தீர்மானித்து, அதற்கான கோப்பை மத்திய அரசுக்கு அனுப்பி வைத்துள்ளது. அதற்கு மத்திய அரசும் ஒப்புதல் வழங்கிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து, பிப்ரவரி 1 ஆம் தேதி தமிழகத்தின் 47 வது புதிய தலைமைச் செயலாளராக ஹன்ஸ்ராஜ் வர்மா ஐ.ஏ.எஸ். பதவியேற்பார் என்று தலைமைச் செயலக வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.