Tue. May 7th, 2024

மகாராஷ்டிரா மாநில சமூக நீதித்துறை அமைச்சராக இருப்பவர் தனஞ்சய் முண்டே. இவருக்கு எதிராக மும்பை மாநகர காவல் துறை ஆணையரிடம் ஒரு பெண் புகார் அளித்துள்ளார். அதில், தனஞ்சய் முண்டே 2006 ஆம் ஆண்டில் இருந்து தன்னை பாலியல் பலாத்காரம் செய்து வருவதாக திடுக்கிடும் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார். இந்த தகவல் கசிந்து மகாராஷ்டிரா அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், குற்றச்சாட்டுக்குள்ளான அமைச்சர் தனஞ்சய் முண்டே, உடனடியாக அந்தப் பெண்ணின் புகாருக்கு விளக்கம் அளித்துள்ளார். தனக்கு எதிராக புகார் அளித்த அந்தப் பெண்ணின் சகோதரியுடன் தனக்கு தொடர்புண்டு என்றும், அவரை திருமணம் செய்து கொள்ளாமலே அவருடன் வாழ்ந்து இரு குழந்தைகளுக்கு தந்தையானது என்றும் அமைச்சர் விளக்கமளித்துள்ளார். இந்த தகவல் தனது மனைவிக்கும் தெரியும் என்று கூறியுள்ள தனஞ்சய் முண்டே, இந்த விவகாரத்தில் எந்த சம்பந்தமும் இல்லாத அந்தப் பெண்ணின் சகோதரி, தன்னை மிரட்டி பணம் பறிப்பதற்காகவே பொய்யான குற்றச்சாட்டுகளை தனக்கு எதிராக கூறிவருவதாக கதறி வருகிறார்.. மாநில அமைச்சருக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டு, சிவசேனா அரசுக்கு திடீர் தலைவலியாக மாறியுள்ளது.