Sun. Apr 20th, 2025

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை நிறுவிய பிதாமகன்களில் முக்கியமானவர் தோழர் சங்கரய்யா. பொதுவுடைமை சிந்தாந்ததில் ஆழமான பற்றுக் கொண்டு மூத்த தலைவர் சங்கரய்யாவின் 100 வது பிறந்தநாள் விழா, எழுச்சியுடன் மாநிலம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று வரும் பிறந்தநாள் விழாவின் முதல் நிகழ்வாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கொடியை தேசிய செயலாளர் சீதாராம் யெச்சூரி ஏற்றி வைத்து தோழர் சங்கரய்யாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறினார். சங்கரய்யா உள்ளிட்ட தோழர்கள் ஏராளமானோர் வீர முழக்கங்களை எழுப்பி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.

தொடர்ந்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தோழர் சங்கரய்யாவின் இல்லத்திற்கு நேரில் சென்று பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். மேலும், அவர் வெளியிட்டுள்ள பிறந்தநாள் செய்தியில், தமிழ்நாட்டு அரசியல் தலைவர்களில் 100 வயதை தொட்டு பொதுவாழ்வில் உள்ள அனைவருக்கும் வழிகாட்டுபவர் சங்கரய்யா என்றும் தியாகத்தின் அடையாளமாக விளங்கும் அவர் மக்கள் நலன் சார்ந்து நின்றவர் என்றும் புகழாரம் சூட்டியுள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

வாழும் வரலாறாக 100 வது பிறந்தநாள் காணும் சங்கரய்யா மேலும் பல்லாண்டுகள் நலமுடன் வாழ வேண்டும். பொதுவுடைமை இயக்கக் கொக்கையில் உறுதிமிக்க சங்கரய்யா ஒட்டுமொத்த தமிழ்நாட்டுக்கும் சொத்தாக திகழ்கிறார் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது வாழ்த்துச் செய்தியில் நெகிழ்ந்துள்ளார்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மூத்த தலைவர் சங்கரய்யாவை நேரில் சந்தித்து 100 வது பிறந்தநாள் விழா வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.

நூற்றாண்டு காணும் தோழர் சங்கரய்யா நல்ல
உடல் நலனுடன் மக்கள் பணியை தொடர வேண்டும்! என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசும் பிறந்தநாள் வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார்
. அதன் விவரம் இதோ….

இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சியின் நிறுவனர்களில் ஒருவரும், அக்கட்சியின் தமிழ் மாநில முன்னாள் செயலாளருமான தோழர் சங்கரய்யா அவர்கள் இன்று ஜூலை 15&ஆம் தேதி நூறாவது அகவையை எட்டுவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. அவருக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மக்கள் நலனுக்காக பாடுபடுபவர்களுக்கு வயது என்பது ஓர் எண் தான். அது தோழர் சங்கரய்யாவுக்கும் பொருந்தும். அகவை நூறை அவர் எட்டினாலும் அவரது மக்கள்நலப் பணிகள் எந்த வகையிலும் பாதிக்கப் படவில்லை. இந்த வயதிலும் பொது நிகழ்ச்சியில் கலந்து கொள்வது உட்பட பல தளங்களில் இயங்கிக் கொண்டு தான் இருக்கிறார். அந்த வகையில் இன்றும் இளைஞராகத் தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.

தோழர் சங்கரய்யாவின் பொதுவாழ்க்கை 9 வயதில் தொடங்கியது. விடுதலைப் போராட்டத்தில் தீவிரம் காட்டி வந்த பகத்சிங் தூக்கிலிடப்பட்டதைக் கண்டித்து நாடு முழுவதும் வெடித்த போராட்டத்தில் 9 வயது சிறுவனாக சங்கரய்யாவும் கலந்து கொண்டார். அதன்பின் 90 ஆண்டுகளுக்கு மேலாகியும் சங்கரய்யாவின் போராட்ட வாழ்க்கை தொடர்ந்து கொண்டிருக்கிறது. 1938&ஆம் ஆண்டில் இந்தித் திணிப்பு எதிர்ப்பு போராட்டம், பின்னர் வெள்ளையனே வெளியேறு போராட்டம், பொதுவுடைமை இயக்கத்துக்கு எதிரான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட காலம் என பல கால கட்டங்களில் அவர் சிறை வாழ்க்கையை அனுபவித்திருக்கிறார். சென்னை மாகாணத்தின் பெரும்பாலான சிறைகளில் தோழர் சங்கரய்யாவின் வாழ்க்கை கழிந்திருக்கிறது. அரசியலில் தோழர் சங்கரய்யாவைப் போன்ற தூய்மையான மனிதர்களைப் பார்ப்பது அரிதிலும் அரிதாகும்.

இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சியின் தமிழ் மாநில செயலாளராக தோழர் சங்கரய்யா பணியாற்றிய 7 ஆண்டுகளில் அக்கட்சி ஏராளமான போராட்டங்களை நடத்தியது. அப்போராட்டங்களை முன்னின்று நடத்திய தோழர் சங்கரய்யாவின் துணிச்சலும், தவறுகளை சுட்டிக்காட்டும் தன்மையும் சில அரசியல் தலைவர்களுக்கு எரிச்சலூட்டியதும் உண்டு. 2001 சட்டப்பேரவைத் தேர்தலிலும், அதற்கும் முன்பும், பின்பும் தோழர் சங்கரய்யா அவர்களுடன் நானும் இணைந்து பணியாற்றியிருக்கிறேன். எங்கள் இருவருக்கும் இடையே நல்ல அறிமுகமும், ஒருவர் மீது மற்றொருவருக்கு மரியாதையும் உண்டு. அது என்றும் தொடரும்.

தோழர் சங்கரய்யாவின் வாழ்க்கை வரலாறும், அரசியலில் அவர் கடைபிடித்த நேர்மையும், ஒழுக்கமும் இன்றைய தலைமுறையினர் தெரிந்து கொள்ளப்பட வேண்டியதாகும். அதை இளைய தலைமுறைக்கு கொண்டு செல்லும் வகையில் தோழர் சங்கரய்யாவின் நூற்றாண்டு வடிவமைக்கப்பட வேண்டும். நூறாண்டை காணும் தோழர் சங்கரய்யா இன்னும் பல ஆண்டுகள் நல்ல உடல்நலத்துடன் வாழ்ந்து தொண்டாற்ற வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

இதுபோன்று பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்கள், பொதுவுடைமை தலைவர்களும் பன்முக ஆற்றல் கொண்ட மூத்த தலைவர் சங்கரய்யாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இவ்வாறு பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

திமுக மகளிரணி செயலாளரும் தூத்துக்குடி எம்.பி.யுமான கனிமொழி, டிவிட்டரில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.